தேவை வரையில் அருகில் அமர்த்தி
தேவை தீர்ந்தபின் முதுகில் குத்தி
கால காலமாய் காயப்படுத்தும் கலைக்கு
ஆலகால நஞ்சுக்கு பெயர் துரோகம்!
கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும்
மகன் தந்தைக்கும் தந்தை மகனுக்கும்
மகள் தாய்க்கும் தாய் மகளுக்கும்
மாமன் மைத்துனனுக்கும் மைத்துனன் மாமனுக்கும்
அண்ணன் தம்பிக்கும் தம்பி அண்ணனுக்கும்
அக்கா தங்கைக்கும் தங்கை அக்காவுக்கும்
அரசு மக்களுக்கும் மக்கள் அரசுக்கும்
உறவுகள் உறவுகளுக்குள்
மக்கள் மக்களுக்குள்...
மாறாத நட்பு சாய்க்காது என்றால்
அதற்கும் விதிவிலக்கு இல்லாமல் போனது
காலம் பார்த்து காத்திருந்து காத்திருந்து
ஞாலம் ஆளும் ஆசையில்
வீழ்ந்து....
எதிரில் நிற்கும் பகையை முறிக்கலாம்
ஒளிந்து தாக்கும் பகையை அழிக்கலாம்
பதுங்கிப் பாயும் பகையை விரட்டலாம்
பார்க்காமலே கண்முன் நிற்கும் துரோகியை?
யாரை நம்புவது எங்கு நம்புவது
எப்படி நம்புவது எதற்கு நம்புவது
சாதாரண நம்பிக்கைக்கு இத்தனை வினாக்களா?
சாதாரணமாய் நின்ற துரோகங்களுக்கு முன்னால்!
நுதல்விழி
இராணிப்பேட்டை